Type Here to Get Search Results !

உலக ஆசிரியர் தின நல்வாழ்த்துகளுடன் - கிராத்தூரான்


ஆசிரியர்களின் அவலநிலை

முடிவெட்டச் சொன்னதனால் முடித்துக் கொண்ட வாழ்க்கைக்குப்
பலிகடா இரண்டு பேர் பதறவில்லை எவருமே
மேதகு மேயரின் மேதமையை வெளிக்காட்டும்
சாதனை வார்த்தைகளுக்குச் சலனமில்லை எங்குமே.

மது விற்கும் அரசு விற்ற மது வாங்கிக் குடித்துவிட்டு
பள்ளியிலே போட்டுவிட்டுச் சென்றனர் சில பரதேசிகள்
விற்றவரும் குடித்தவரும் புண்ணியவான்கள் ஆகிவிட
வாத்தியார்க்குத் தண்டனை கலங்கவில்லை யாருமே.

நியாயம் பேசும் அநியாயிகள் நிறைந்து விட்ட காரணத்தால்
பெண்ணுரிமை பேசுவோர்கள் கண்கள் குருடானது.
கல்விக்கூடம் என்பது அரசியல் மைதானமாய்
ஆகிவிட்டதென்பதால் ஆட்டங்கள் தொடருது.

உலகத்தில் உயர்ந்ததாக மதிக்கப்படும் ஓரினம்
தமிழகத்தில் மதிப்பிழந்து ஓரங்கட்டப் பட்டது.
காப்பதற்காய் என்கின்ற சங்கங்கள் அனைத்துமே
உரிமைகளை அடகுவைத்துக் கும்பிட்டு நிக்குது.

ஏமாற்றிய கூட்டமொன்று ஏமாந்த கூட்டமொன்றின்
இயலாமையை இரசித்தபடி எள்ளி நகையாடுது
ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோர் இருப்பரென்ற
சொல்வாக்கு செல்வாக்குடன் தலை விரித்து ஆடுது.

*கிராத்தூரான்*

Top Post Ad

Below Post Ad