மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!
"அ"ன்பை அடித்தளமாக்கி,
"ஆ"யுளும் அர்ப்பணிப்பு மனதை
ஆயுதமாக்கி,
"இ"ன்னலையும் பிறர் நலத்துக்காக
கன்னலாக்கி,
"ஈ"கையின் குணத்தினையே
வாழ்வாக்கி,
"உ"ள்ள வலிமையில்
இமயமலையாகி,
"ஊ"றுகளைக் களைய
உயர்வானதை கூர்வாளாக்கி,
"எ"னதென்ற தன்மையை
எள்ளளவும் கொள்ளாது,
"ஏ"ணிப்படியாக குடும்பத்திற்கு
ஏற்றம்தரும் பெண்ணினமே!
"ஐ"யமில்லா அன்பை வழங்குவதில்
அற்புத விளக்காகி,
"ஒ"ளிமயமான வாழ்வை உருவாக்க,
"ஓ"ய்வில்லாத உனழப்பைக் கொட்டும்
ஔடதமாய் மட்டுமல்ல
"ஔ"சித்தியமிக்க ஆற்றல் மறவர்களே
வாழ்க!வாழ்க!
"ப"த்துமாதம் சுமக்கும் தாயாக,
"பா"ச முத்துகளாய் நடைபயிலும்
மாசற்ற குழந்தையாக,
"பி"தற்றலில்லா பேரன்பின் மணிமகுடமாம்
சகோதரியாக,
"பீ"டுநடைப்போட இன்பத்திலும் துன்பத்திலும்
மனைவியாக,
"பு"யலிலும் இடியிலும் புன்னகையை வழங்கி மகிழும்
நல் நட்புகளாக,
"பூ"வுக்குள் பூகம்பமென மாமியாராக, மருமகளாக,
"பெ"ண்மைக்கு இலக்கணமென பெருமைபொங்க
சித்தியாக, அத்தையாக, பெரியம்மாவாக,
"பே"ருவகையுடன் பிறரை வாழ்த்துவதில்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை,பேரிளம்பெண்ணென ஏழு பருவங்களாக,
"பை"ந்தமிழ் சிறப்பினை விளக்க பகலவனாக,
"பொ"றுப்பைச் சுமந்து தனக்கென வாழாது,
"போ"ராட்டமே வாழ்க்கையென்றிருந்தாலும்,
"பௌ"ர்ணமியாக உலகில் என்றும் மகளிரே
வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர் மூச்சென,
பெருமைமிக்க பெண்ணினத்தை
வாழ்த்துவதே பேருவகையென,
மனிதகுலத்தின் மாசற்ற தங்கங்களாக
மண்ணில் நடைபயிலும் மகளிரினத்தைப்
போற்றிப்பாடும்
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.