சிக்னலில் காத்திருக்க பொறுமை இல்லாமல் அடிக்கடி ஹாரன் அடிப்பதை பழக்கமாக கொண்டவர்களுக்கு முடிவு கட்டுவதற்காக மும்பை போக்குவரத்து போலீசார் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
தி பனிஷிங் சிக்னல் என்ற பெயரில் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி டிராபிக் சிக்னல்களுடன், டெசிபல் மீட்டர்கள் எனப்படும் ஒலி அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் க்ரீன் சிக்னல் எரியும் முன் யாராவது ஹாரன் அடித்து, டெசிபல் அளவு 85 க்கு மேல் சென்றால், உடனடியாக சிக்னலில் உள்ள விநாடிகள் அதிகமாகும். அதாவது க்ரீன் சிக்னல் வருவதற்கு 15 விநாடிகள் இருக்கும் போது யாராவது ஹாரன் அடித்தால், அவர்கள் க்ரீன் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டிய நேரம் 90 விநாடிகளாக மாறிவிடும்.
இதனால் சிக்னலில் நிற்கும் போது ஹாரன் அடித்தால், போக்குவரத்தில் காத்திருக்க வேண்டிய நேரம் அதிகமாகும். தற்போது இந்த புதிய திட்டத்தால் சிக்னல்களில் யாரும் ஹாரன் அடிப்பதில்லை. இந்த முறையை மஹாராஷ்டிராவின் மற்ற பகுதிகளிலும், நாடு முழுவதிலும் விரிவுபடுத்தப்பட்ட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Source Dinamalar