தினமலர் செய்தி
ரஜினி நடித்த ‛தர்பார் படம் நேற்று(ஜன.,9) வெளியானது. இதில் ஆங்காங்கே சில அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஒரு காட்சியில், காசு இருந்தா ஜெயில்ல என்ன வேணாலும் பண்ணலாம் என்பார். அதற்கு உடன் இருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர், ஆமாம் காசு இருந்தா ஜெயில்ல ஷாப்பிங் கூட போகலாம். சவுத்ல கூட ஒருத்தர் அடிக்கடி ஷாப்பிங் போறதா நியூஸ்ல பார்த்திருக்கேன் என்பார். இது சசிகலாவை குறிப்பிடுவதாக கூறி எதிர்ப்புகள் கிளம்பின. அந்தக்காட்சியை நீக்க வேண்டும், இல்லையென்றால் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என சசிகலாவின் வக்கில் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியிருந்தார். இந்நிலையில் அந்தக்காட்சியை நீக்குவதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரில், ‛‛எங்களின் தர்பார் படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்ததால் அது நீக்கப்படும் என பதிவிட்டுள்ளது.