ராணுவம் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு குறித்து தமிழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என மதுரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி உதவி கமாண்டன்ட் சனீஷ் பேசினார்.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் மீனா வரவேற்றார். உதவி கமாண்டன்ட் சனீஷ் பேசியதாவது: ராணுவம், பாரா மிலிட்டரி, மத்திய தொழில் பாதுகாப்பு துறை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள் உள்ளன.அதற்கு ஆன்லைனில் ஆங்கிலம், அடிப்படை விஞ்ஞானம், கணிதத்தில் கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் தேர்வு நடக்கிறது. மத்திய வேலைவாய்ப்பு இணைய தளத்தில் விபரம் அறியலாம். இதுகுறித்து தமிழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை, என்றார். மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.