Type Here to Get Search Results !

வெள்ளைப்படுதல் குறித்த விழிப்புணர்வு அவசியம்



பெண்களுக்கு வரும் உடல் கோளாறுகளில் ஒன்று வெள்ளைப்படுதல். சில நேரங்களில், இது மாதவிடாய் போன்று இயல்பான நிகழ்வாக கூட இருக்கலாம். இதற்கு நாம் முதலில் எது இயல்பு, எது நோயிற்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்வதும், மாதவிடாயை பற்றி புரிந்து கொள்வதும் அவசியம்.

பெண்களுக்கு பொதுவாக, 21 முதல், 45 நாட்களுக்கு ஒருமுறை, மாதவிடாய் வருவதும், இதில் ரத்தப்போக்கு, இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை இருப்பதும் இயல்பு.இந்த மாதவிடாய் சுழற்சிக்கு நடுவே, அதாவது, மாதவிடாய் வருவதற்கு, 14 நாட்களுக்கு முன் வெள்ளைப்படும்; இது இயற்கையான நிகழ்வு. சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளி வந்து கர்ப்பப்பைக்கு வரும் நாட்கள் இவை. அதேபோல், மாதவிடாய் வருவதற்கு முன், இரண்டு முதல் மூன்று நாட்கள், வெள்ளைப்படுவதும் இயல்பே. இது ஹார்மோன்களின் மாற்றத்தால் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுகள், ஒவ்வொரு மாதமும் நடக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு அவ்வப்போது வெள்ளைப்படும்.குழந்தை பிறந்த பின், இரண்டு முதல் நான்கு வாரங்கள், ரத்தப்போக்கு அல்லாது வெள்ளைப்படும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை.எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?சானிட்டரி நாப்கின் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படும்போது, இடைவெளி இல்லாமல் படும்போது, துர்நாற்றத்துடன், வலியுடன், வெள்ளை நிறம் அல்லது பச்சை, சிவப்பு நிறங்களில் படும்போது, அரிப்பு ஏற்பட்டால், மாதவிடாய் முழுமையாக நின்ற பின் படும்போது, கர்ப்பிணி பெண்களுக்கு தங்கள் உள்ளாடை, பாவாடை நனையும் அளவிற்கு தண்ணீர் போலவோ, வயிற்றுவலி, ரத்தப்போக்கு போன்றவை இருந்தால், குழந்தை பிறந்த பின் துர்நாற்றமும் வலியும் சேர்ந்து படும்போது, மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

இது தவிர, கர்ப்பப்பை வாய் மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் புண், தொற்று, கேன்சர், பிறப்புறுப்பில் கேன்சர், போன்றவற்றாலும் இப்பிரச்னை வரலாம்.கர்ப்பப்பை வாய் கேன்சர், இந்திய பெண்களுக்கு வரும் கேன்சரில், இரண்டாம் இடத்தில் உள்ளது. துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுவது, -உடலுறவிற்கு பின், ரத்தப்போக்கு இருப்பது, கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். எளிமையான பேப்ஸ்மியர் பரிசோதனை மூலம், இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும். -21 வயதிற்கு மேல் உள்ள பெண்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, இப்பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசிகளும் உள்ளன. எந்த வயது பெண்களும், இதை போட்டுக் கொள்ளலாம் என்றாலும், 11 மற்றும் 12ம் வயதில், தலா ஒருமுறை என, இரண்டு முறை பெண் குழந்தைக்கு இதை போட்டால், முழு பாதுகாப்பு கிடைக்கும்.

Source: Dinamalar


Top Post Ad

Below Post Ad