துருவப் பகுதிகளில் இப்போதே கடல்கள் பச்சை நிறமாக மாற ஆரம்பித்துவிட்டன. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மட்டும்தான் இன்னும் அடர்த்தியான நீலக் கடலாகத் தோற்றமளிக்கின்றன. பெருங்கடல்களின் நீல நிறம் 2100-ம் ஆண்டுக்கு முன்னதாகவே மாறிவிடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வுமுடிவு. கடலில் காணப்படும் மிதவைத் தாவர நுண்ணுயிர்கள் (பைடோபிளாங்டன்-ஆல்கே) காரணமாக கடலில் பச்சை நிறம் ஏற்படுகிறது. இந்தத் தாவரங்கள்தான், கடலில் வாழும் மீன் உள்ளிட்டவற்றுக்கு உணவாகப் பயன்படுகிறது.
இவை குளோரோபில் என்ற பச்சையத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றுகின்றன. காற்றிலிருக்கும் நைட்ரஜனை கிரகித்து நிலைப்படுத்துகின்றன. பைடோபிளாங்டன்கள் நீலத்தைக் கிரகித்து தங்களுடைய பச்சை வண்ணத்தை ஒளிரச் செய்யும் இடங்களில் எல்லாம் கடல் பசுமையாகக் காட்சி தருகிறது. பைடோபிளாங்டன்கள் அடர் பச்சையானால் அங்கே கரியுமிலவாயுவும் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். பருவநிலை மாறுதல்கள் மட்டுமின்றி எல்நினோ கடலடி நீரோட்டங்களும் இந்த நிற மாற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன. இப்படியே நீடித்தால், பிறகும் ‘வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்' என்றெல்லாம் வர்ணிக்க முடியாது.